Posts

வாழ்வியலுக்கான சாத்தியங்கள்

Image
நீல  நிற தந்தியில் தகவல் வந்திருந்தது ஊரில் அப்பா கவலைகிடமென! ஊதா நிற பேருந்தில் சிவப்பு நிற இருக்கையில் வெள்ளை பயண சீட்டுடன் போய்க்கொண்டிருந்தேன் நான், ஊர் போய்  சேரும்பொழுது வானம்  அடர் கறுப்பு நிறத்தில் தன்னை மாற்றிக் கொண்டிருந்தது, எல்லாம் முடிந்து போய் விட்டதாக மஞ்சள் நிற சட்டைப்  போட்டிருந்த மாரிமுத்து அண்ணன் சொல்லி அனுப்பினார், மயானத்தை தேடி போய்க் கொண்டிருந்தேன் நான் அப்பாவினுடைய கல்லறையில் நிறம் இல்லா மழை பெய்துக்கொண்டிருந்தது! நிறைய வேளைகளில் மனித வாழ்வியலுக்கான சாத்தியங்கள்  நிறங்களால் நிரம்பி விடுகின்றன .                                                                     பா.சண்முகம் 

நீள் இரவு

Image
  யானை துதிக்கையின் சுரசுரப்பு பொருந்திய இருளென கிடக்கிறது இரவு ! வானப்பெண்ணின் கீழ்  வனம் ஒன்றினை உருவாக்க எச்சமிடுகிறது பறவை! குறுவை  செடிகளுக்கு கீழ் படுத்துறங்குகிறது மண்புழு ஒன்று ! இவை களினூடே எங்கோ ஒரு சேவலுக்காக மெல்ல விடிந்து கொண்டிருக்கிறது இவ்விரவு !                                                                             பா .சண்முகம்

வியாபாரம்

முதல் வியாபாரம் செய்ய போகும் நாமும் கடைகாரனோடு சேர்ந்து வேண்ட வேண்டியதாய் இருக்கிறது விற்பனை நன்றாய் ஆகவேண்டுமென !

நிர்வாணம்

அடுத்தவர்களை மறந்து, தன்னை மட்டும் அறிந்த பைத்தியக்காரன் எனப்படும் ஒருவன், நெடுக செல்லும் சாலை ஒன்றில் செல்கிறான் , வீசும் காற்றில் அவன் ஆடை விலக , நிர்வாணத்தை  மறந்து  தன் கைலியை மட்டும்  பத்திரபடுத்துகிறான் அவ்வழியே அவனை சிரிப்புடன் கடந்து போகின்றன ஆடையணிந்த அவிழ்க்கப்படாத சில நிர்வாணங்கள் பா.சண்முகம்

பால்யத்தின் பக்கங்கள் !

  வெற்றிடம் ஒன்றின் இருட்டு மூலையில் மெல்லிய நூல் ஒன்றின் முனையில் கட்டப்பட்டு சதுரமாய் வரைந்து தொங்கிகொண்டிருகிறது வானம். நெடு உயரத்தில் பருந்தொன்று தன் அலகில் இரையை கொத்தியபடி பறந்து செல்கிறது. மற்றொரு ஓவியத்தில் குதிரை ஒன்று வேகமாய் ஓட புழுதியை கிளப்பியபடி விரிகிறது சாலை. பக்கத்தில் அமர்ந்து கிறுக்கி கொண்டிருக்கிறாள்  இரண்டு வயதையொத்த பெண் குழந்தை. அப்படி ஒன்றும் இல்லை என் ஓவியம் அவளுடையதைபோல் ! அவளை பால்யமென நினைத்து கொண்டிருக்கிறேன்.  அந்தவெற்றிட இருட்டில் என்னை அவள் பால்யமென சுமந்து திரிந்து  கொண்டிருக்கிறாள் கையில் தூரிகையோடு !!!                              பா .சண்முகம்

கல்லறைச் சாலை ..

Image
நேற்று இறந்ததாகச் சொல்லப்படும் கதிரேசனும் இதற்கு  முந்தைய வாரம் இறந்து  போன செல்லியம்மனும் ,சுந்தரமும் இந்த வழியாகத்தான் மயானம் கொண்டு செல்லப்பட்டார்கள்... இரவு காட்சி முடித்து  வெளியேறும் கூட்டத்தில் வடமாநிலத்தான் ஒருவன் துப்பிய பாக்குக்கறை நேற்று லாரியில் அடிபட்டு இறந்த நாய் ஜிம்மியின் ரத்தத்தினை போலிருந்தது பிய்ந்து கிடக்கும் சாலை தன்னுள் தெரியும் மழை நீரில் நிலவை அழகுபடுத்திக் கொள்ள அனுமதித்துள்ளது...! இரவு வந்த பின்னமும்   விழித்துகொண்டிருக்கிறது உயிர் எனும் வரையறை அற்ற இந்த கல்லறை சாலை!!                                                                         பா.சண்முகம்

மரணம் எனப்படுவது .........

Image
சனிக்கிழமை இறந்த ஒருவன் தனியாய் போககூடாதென  கோழி  ஒன்றை பலிகொடுக்கிறார்கள் மரணத்திற்காக மரணத்தையே ! காத்துகொண்டிருக்கிறது தேவர்  கடை கோழி ஒன்று, ஒவ்வொரு  மரணங்களின் போதும் கூடவே  நிறைய மரணங்களும் மரணித்து  கொண்டுதான் இருக்கின்றன!!                                    -பா .சண்முகம்